Friday 4 November 2011

                       தினமணியின் அன்பு ஆசிரியர் 
            திரு.வைத்தியநாதன் அவர்களுக்கு


 



ஊருக்கு நல்லது சொல்லும்
உத்தமருக்கு அன்பின் வணக்கம்.
பிடிக்காத அலைவரிசைகளைப்
பிடிவாதமாய் நகர்த்துகிற
ரிமோட்களைப் போல் எல்லோரும்
நமக்கென்ன என்று நகரும்போது
சமுதாய வியாதிகளுக்கு
வைத்தியம் பார்க்கக் கூடியன
உங்கள் தலையங்கங்கள்

கண்ணாடித் தொட்டிகளின்
செவ்வகச் சுவர்களில்
முட்டிமோதிவிட்டு
அலைகிறவேடிக்கை மனிதர்களுக்கிடையில்
உங்களைப் போன்ற ‘பாரதி வழித்தோன்றல்கள்
அவசியம்!

சுருக்கமாகச் சொல்வதும்
சுருக்கென்று தைக்கச் சொல்வதும்
உங்கள் தலையங்கங்களின் தனிச்சிறப்பு

நானறிந்த வகையில் வெளிநாடுகள் குறித்த நீங்கள்
எழுதியவற்றை விட உள்ளுர் விவகாரங்கள்
குறித்து எழுதியவை உயிர்த்துடிப்புள்ளவனாக
அமைந்திருக்கின்றன.

பனையோலைப் பெட்டிகளில் கொச்சக்கயிறு
பிடித்து தூக்கிப்போன உடன்குடிக் கருப்பட்டிகள்
உங்கள் உள்ளுர் விவகாரத் தலையங்கங்கள்

நியான் ஒளிரலில்
தள்ளுவண்டிகளில் பொருட்களை நிரப்பியபடி
உள்ளே பயணிக்கும் பேரங்காடிச்சாயல்
வெளிநாடு குறித்த தலையங்கங்கள்.

மண்பானைக் குளிர்ச்சியில்
சிரட்டைக் கரண்டியோடு
வழிந்த நல்லெண்ணை
இன்று பாலிதீன் பாதுகாப்போடு

தலை அங்கம் விட்டுப்போனாலும்
நான் துணிந்து எழுதுவேன்

என்று மதிதா பள்ளியிலிருந்து காசி கிளம்பிளவன் தானே முண்டாசுக் கவிஞன் பாரதி...

அப்துல் கலாமை அழைத்துவந்து நெல்லையிலே
‘ஊருக்கு நல்லது சொல்லியிருக்கலாம்
இங்கே உங்கள் தித்திப்பான தமிழ்ப் பிதாமகன் தி..சி. உள்ளாரே!

மண்டையோட்டை உடைத்தாலும்
மறுபேச்சு பேசாத மனிதர்களுக்கு மத்தியில்
கந்தக வரிகளோடு காகிதங்கள் வரத்தான்
வேண்டும்.

”பத்தாம் தசராக்களின்
இன்னமும் காளிகள்
மகிஷாசூரன்களோடு
மல்லுக்கு நிற்கத்தான்
வேண்டியிருக்கிறது
அவனும் மாய்ந்த பாடில்லை
அவளும் ஓய்ந்த பாடில்லை
என்ற வரிகளை நான் உங்களுக்காக எழுதுகிறேன்.

மார்க்கெட் கூறுகளில்
கவிழ்ந்து மறைத்து
விற்கப்படுகிற
கத்திரிக்காயின் லட்சணம்
அடுத்த நாள்
அடுப்பறையில் அவளிடம் அறுபடும் போதுதான்
தெரிகிறது”  

அடுத்த நாள் காலை தலையங்கங்கள் அதே பணியைச் செய்கின்றன.

    “வாயிருந்தால் வாய்ப்புஎன்று வாயை நம்பி அநீதிகள் கிளம்பும்போது நாம் கையை நம்பியல்ல.  உள்ளத்து மெய்மை நம்பி நாம் கிளம்பத்தான் வேண்டியிருக்கிறது.

சமுதாய நோய் நீக்கும்  தினமணிவைத்திய நாதன் அவர்களுக்கு மீண்டும் வசந்த வணக்கங்கள்.
    உங்கள் தலையங்கச் செய்திகள் பலவற்றை என் ‘மகாபரதி’ இணைய வலைப்பூவில் கவிதை யாக்கியிருக்கிறேன். 


                                                                     
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி  : 09952140275
Email : nellaimaha74@gmail.com
WWW.MAHATAMIL.COM 

Sunday 23 October 2011

வண்ணதாசனின் தொடக்ககாலக் கதைத் தொகுதிகள்
முனைவர். . மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி – 627 011.

1.    கலைக்க முடியாத ஒப்பனைகள் (1976)
    “அஃக்பரந்தாமனால் 1976 டிசம்பரிலே வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்த வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுதி இது. பள்ளியில் மாணவன் பிபின் எல்லோருக்கும் மிட்டாய் தந்துவிட்டு ஆசிரியர் தங்கம் பிள்ளை சார்வாளுக்குச் சாக்லேட் தராதபோது அவருக்கு ஏற்பட்ட நிலையே 'சபலம் கதை' +2 பாடத்திட்டத்தில் வைக்கப்பட்ட 'உல்லாசப் பயணம்', வடிகால் 'குஞ்சு', புளிப்புக்கனிகள் 'பிரபா', கல்யாண வீட்டிலும் 'காசாளர்' வேலை பார்த்ததை நினைவுபடுத்தும் 'கலைக்க முடியாத ஒப்பனைகள், 1974இல் 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றதனுமை”. குளிர்பான எச்சிப்பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டிருந்தவனை எச்சியைக் குடிக்காதே என்று கவுரவத்தோடு சொன்னமிச்சம் கதையும் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்.  முதல் பிரசவம் செத்துப் பிழைப்பது போன்றது. முதல் தொகுப்பு வண்ணதாசனுக்கு முகவரி அளித்த உயிரோவியம்.
2.    தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் (1978)
    காலம் கடந்தவுடன், இருமல் மருந்துகள் வேண்டுமானால் காலாவதியாகலாம்.  இலக்கியம் ஒரு போதும் காலாவதியாவதில்லை.  1978ஆம் ஆண்டு விஜயா வேலாயுதம் வெளியிட்ட வண்ணதாசனின் இரண்டாம் தொகுதி.  பேருந்தில் அழுத குழந்தையை 'எங்க அம்மையில்லா' என்று அன்பின் வடிவமாய் சமாதானப்படுத்திய பெயர் தெரியாத மீசை பெரியவர், கணவனுக்காகப் போர்வை வாங்கிப் புறக்கணிப்புக்குள்ளான அரசு, நெருக்கடியான தன் அலுவலகத்தையே அமைதியாகக்கண்ட 'ஞாபகம்' கதைத் தலைவி, வெள்ளையடிக்க வந்தவனைப் பரிவுடன் பார்த்த நீலா, அலுவலகத்தில் சொர்க்கத்தை அனுபவித்த தாஸ், பக்கவாதம் வந்த மச்சானின் படத்தோடு தன் படத்தைச் சேர்த்து ஸ்டூடியோவில் வரையக் கண்ணீரோடு வந்த அந்தப் பெண். சரஸ்வதி பூஜைக்கு அம்மன் முகம் செய்து வேலைக்காகக் காத்திருந்த முருகேசன், பிலிம் துண்டுகளில் படம் பார்த்த செல்லமக்கா, மெலிந்த மனைவியைக் கண்டுகொள்ளாமல் குமுறிய கணவன், சினை ஆட்டின் மீது செங்கலை எறிவதைக்காணச் சகிக்காத புஜ்ஜி என்று நிறையப் பூக்கள் வண்ணதாசனின் இத் தோட்டத்தில் உண்டு.
3.    சமவெளி (1983)
    யாராலும் பதிவு செய்யப்படாத பாத்திரங்களை அழுத்தமாக இம்மூன்றாம் தொகுதியில் வண்ணதாசன் துணிந்து படைத்துள்ளார்.  தேரோட்டம் பார்க்கத் துடிக்கிற கோமு (நிலை), கோட்டிக்காரி பொன்னம்மா (தாகமாய் இருக்கிறவர்கள்), அடுத்த கதையைப் படிக்க விடாமல் மனதில் உறுத்தும் பக்கா, குஞ்சு (வருகை), 'இந்த இடத்தில் வாழக்கையை ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்', என்று நினைத்த ஓவியன் (சமவெளி), 'சின்னு முதல் சின்னுவரை' நீள் கதைக்கு முன்பாகவே, 30 பக்கங்களில் லாட்ஜ் நிகழ்வுகளில் சிவனைப் பொருத்தி எழுதிய 'வரும்போகும்' என்ற நீள் கதை, அசுத்தம் செய்த பூனையை விரட்ட பூனையை விட அறையை அதிகமாக அசிங்கம் செய்தவனின் 'பூனைகள்' கதை, போன்ற அருமையான கதைகள். வயோதிகத்தின் காரணமாகக் காது கேட்காத தாத்தாவை உடல் மொழியால் பேசிக் சமாதானப்படுத்தியகூறல்' கதை, மரத்தை மனிதனை விட உயரமாக உயர்த்தியவெளியேற்றம்கதை. பூ விற்றவனைப் பற்றிப் பேசிய 'உதிரி' கதை போன்ற அருமையான கதைகள் இத்தொகுதியில் உண்டு.
4.    பெயர் தெரியாமல் ஒரு பறவை (1985)
    வண்ணதாசன் கதைகளில் முத்திரை பதித்த 'பெயர் தெரியாமல் ஒரு பறவை' அவரது நான்காம் தொகுதி.  அவருடைய அகராதியில் அஃறிணை என்பது உயர்திணையே என நிருப்பித்த தொகுதி பெயர் தெரியாமல் நிலக்கோட்டை அறைவாசலில் கிடந்த ஏதோ ஒரு பறவை, மனக்குப்பைகளைக்கூட்ட வந்த சிலம்பாயி (வேறு வேறு அணில்கள்), அன்பின் சிநேகிதனாய் வைத்தியலிங்க சித்தப்பா (ஆறுதல்), ஷிபா மருத்துவமனையில் படுக்கையிலிருந்த மனிதரின் மனநிலைகாட்டிய 'கடைசியாகத் தெரிந்தவர்' கதை.  குழந்தையின் கழுத்தில் போட்ட சங்கிலி காலில் போட்டதாய் மாறிய 'சங்கிலி' கதை, குழந்தைகளிடம் எரிந்து விழுந்த சென்பகம் (அந்தந்த தினங்கள்), புல்லாங்குழல் இசை வழிந்த 'திறப்பு', கதை 'கூறல்' கதையின் நீட்சியாய் இன்னொரு தாத்தாவோடு 'நிறை' கதை, அற்புதமான விருத்தா எனும் புகைப்படக் கலைஞனின் கதை (போய்க் கொண்டிருப்பவள்), சொந்த ஊரில் அடங்கத்துடித்த 'அடங்குதல்' கதை,
ஒர்க் ஷாப் பையன்களைப் பதிவு செய்த 'பட்டறைகள்' கதை, விலங்குகளைவிடக் கேவலமாய் நடத்தப்பட்ட பொன்னுலட்சுமியின் (மிதிபட) கதை என்று தமிழ்க்கதைகளை எண்பதுகளில் வண்ணதாசன் வேறு தளத்திற்கு நகர்த்தியது புலனாகிறது.
5.    மனுஷா மனுஷா (1990)
    தி. ஜானகிராமனுக்கு அடுத்து ஆண் பெண் உறவுநிலைகளை அழுத்தமாகக் சொன்ன கதை ஆசிரியராக வண்ணதாசனைச் சொல்லலாம்.  வளவுவீட்டில் எந்தப் பாலியல் நோக்கமுமில்லாமல் பிரமு அண்ணாச்சியின் மகளைக் கட்டிப் பிடித்து முத்தமிட்ட திருமணமான இளைஞன் (மனுஷா மனுஷா), தற்கொலை செய்து கொண்ட மலையப்பன் கதை (சிறுகச் சிறுக), 14 பக்கங்களைக் கொண்ட நீள் கதையாக இத்தொகுதியில் உள்ளது.  எழுத்தாளனின் கதையைச் சொன்ன 13 பக்கக்கதைசொல்ல முடிந்த கதை' 'பெருந்திணை' என்று சங்க இலக்கியம் பேசிய பொருந்தாக் காதலை முதுமைக் காதலை, சமுத்திரக்கனி நாடார் மூலம் புலப்படுத்தியஎன்றைக்கும் உள்ள வெயில் கதை’, வண்ணதாசனின் உயிர் உறவுப் படைப்பான சுந்தரத்துச்சின்னம்மையைத் தந்த 'சிறிது வெளிச்சம்' கதை, உயிர் உளசலாகிக் கிடந்த போது ஏதேனும் பாரத்தைத் தன் தலையில் கட்டி விடுவார்களோ என்று பயந்துப் பம்மிய சராசரி இளைஞனின் (கிளைகள் இலைகள்) கையறு நிலைக்கதை ஆண் பெண் உறவுநிலைகளை வைத்து ராஜீயைப் படைத்த 'அப்பால் ஆன' கதை.  சங்க இலக்கியப் பாடலை அடியொற்றி எழுதப்பட்ட 'செடிகளுக்கு' கதை.  மலேயாப் பெண்ணை வைத்து எழுதப்பட்ட 'மதில்மேல் சேவல்' கதை, கணவனுக்குத் தெருப் பெண்கள் தந்த மரியாதையை மனதிற்குள் ரசித்த ஈஸ்வரியின் (அவனுடைய நதி அவளுடைய ஓடை) கதை என்று இத்தொகுதி முழுக்க ஆண் பெண் உறவுகளை தி.ஜா. வைப்போல் புடம்போட்டு எழுதியுள்ளார்.
6.    கனிவு (1992)
எழுத்திலும் கனிவும் பக்குவமும் பதமும் வண்ணதாசனின் ஆறாவது தொகுதியில் தெரிகிறது.  நவாப்பழம் விற்கும் களக்காட்டு சாய்பு (பற்பசைக் குழாயும் நாவல் பழங்களும்), நீச்சல் பழகுகிறவனின் அன்புக்குரிய மகாதேவன் பிள்ளை (நீச்சல்), வயதான பாட்டியைக் கவனித்து வந்த தனலட்சுமியின் (விளிம்பில் நிற்கிறவர்கள்),  மண்ணை வைத்துக் கலைகள் புரிந்த ஆறுமுக வேளார் (நிழல்குதிரை), வண்ணதாசன் கதைகளில் கொடூரமாக ஆண்களால் தாக்கப்பட்ட கிட்டி போன்ற அப்பாவிப் பாத்திரங்கள், இகாரஸ், எனும் கிரேக்கத் தொன்மத்தை வைத்து எழுதிய 'சூரியன் அருகில் பறக்கிறவர்கள்' என்ற புகழ் பெற்ற கதை போன்ற கதைகள் இத்தொகுதியில் உள்ளன.