Saturday 27 July 2013

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழா




தற்செயல் நிகழ்வுகள் கல்வெட்டுக்களாய் மனதில் பதிந்து விடுவதுண்டு.அன்றும் அப்படித்தான் நடந்தது.எங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் அவர்கள் தொலைபேசியில் கேட்டுக் கொண்டபடி திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.மிகப் பெரிய அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது.முன்னர் அமரச்சொல்லி நீதிமன்றக் கிளையின் மேலாளர் திரு.நாகூர்மீரான் கேட்டுக் கொண்டார்.முதல் வரிசையில் சிங்கம் போன்று அமர்ந்திருந்தது என் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்கள்.சில நேரங்களில் சிலரைச் சந்திப்பதற்காகவே சில கணங்களைக் காலம் நிறுத்தி வைக்கிறது.நான் எண்பதுகளில் பாளை.தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவனாக அடிஎடுத்து வைத்ததும் சகவகுப்புத் தோழராக இன்று இசையமைப்பாளராகத் திகழும் விஜய் ஆண்டனி அங்கே வந்து சேர்ந்தார்.தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்ற ஆவல் தோன்றக் காரணம் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்களின் ஆறடி உயர கம்பீரஉருவம்,தெளிவான அழுத்தமான தமிழ் உச்சரிப்பு,இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கைகளைப் பின்னால் கட்டியபடி அவர் பள்ளி வளாகத்தில் வந்துநின்றால் நாங்கள் பயந்து ஓடியதுண்டு. தேசிய மாணவர் படையில் நான் சேரக்காரணமும் அவர்தான்.என்.சி.சி.சீருடையில் காலை இளம்வெயிலில் அவரைப் பார்ப்பது அழகாக இருக்கும்.பாரதி மீசை,மேல் நோக்கி சீவிய தலைக்கேசம்.பரடுக்கு தாமதமாய் வந்தால் அலுமினியப் பூண்போட்ட கம்பால் மிரட்டுவாரே அன்றி யாரையும் அடித்ததில்லை.சத்தமான குரலை எழுப்பி என்.சி.சி ஆணைகளை அவர் பிறப்பிக்கும் கம்பீரத்தை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காக்கி சீருடை கசங்கி இருந்தால் அவர் கண்கள் சிவக்கும்.புளி மூட்டையில் வச்சீருந்தையா? என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் என் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் வழியும்.இரக்கப்பட்டு போடே என்பார்.ஒவ்வொரு மாணவனாய் உற்றுக் கவனிப்பார்.மணல் மூட்டையை அடுக்கி தூப்பாக்கிசுடும் பயிற்சிக்காக எங்களை சேவியர் கல்லூரி மைதானத்திற்கு அன்று அழைத்துச் சென்றிருந்தார்.ஒரு வாரம் பயிற்சி வேறு அளித்திருந்தார்.நிகழ்வுகள் முடிந்து நான் சுட்ட இலக்கு அட்டையைக் கொண்டு வரச்சொல்லிப் பார்த்தார்.என் இலக்கு அட்டையில் ஒரு குண்டுகூடப் பாயவில்லை.பக்கத்து மாணவனின் இலக்கு அட்டையில் குறிதவறாமல் சுட்டிருந்தேன்.இனிமேல் என்.சி.சி பக்கம் வந்தே நடப்பதே வேறு என்று விரட்டி வீட்டார்.அந்த ஆசானை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் சந்திக்க வைத்தது வாழ்வில் மறக்க இயலாத தருணம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த வாடிக்கையாளர் விருதினை என் ஆசான் திரு.பர்னபாஸ் அவர்கள் பெற அவருக்கு அடுத்து கல்லூரியின் சார்பில் அதே மேடையில் என் ஆசிரியப் பெருந்தகை முன்னிலையில் அப்பரிசினை நான் பெறக்காரணமாய் அமைந்த நீதிமன்றக் கிளை மேலாளர் திரு.நாகூர்மீரான் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.எழுபத்தைந்து வயதிலும் அதே முறுக்குமீசை அதே நிமிர்ந்த நன்னடை..என்ஆசானே நீங்கள் எப்போதும் முன்மாதிரி.படத்தில் அவர் முன்வரிசையில் அமர நான் அவருக்குப் பின்னால்.. என்றும் அவர் பின்னால்...

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

Friday 12 July 2013

சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி



நினைத்துப் பார்க்கிற யாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கத்தான் செய்யும் .

என் பள்ளி நாட்கள் இனிமையானவை ,இலையை, உயர மலையை ,கவின் கலையை ,கடல் அலையை ,அழகு சிலையை ரசித்த நந்தவன நாட்கள் பாளை .தூய சவேரியார் பள்ளியில் பயின்ற நாட்கள் .
உண்டதைச் செரித்து ,கண்டதை  ரசித்து ,கற்றதை நினைத்து களித்த நாட்கள் பள்ளி நாட்கள் நினைத்துப் பார்க்க இனியன .
கலை வார விழாவை நடத்தி நாய் குட்டி வளர்ப்பு முதல் கவிதை எழுதுதல் வரை 300திறன்களுக்கு பரிசளித்த பள்ளி என்  பாளை .தூய சவேரியார் பள்ளி.
கனல் பத்திரிக்கையில் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே எழுத வைத்த அருட்தந்தையர்கள் 
வாசிக்க நிறைய நூல்களைத் தந்து உதவிய நெல்லை மாவட்ட மத்திய நூலகம் . தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்றுத் தந்த என் அருமைத் தந்தையார் தமிழாசிரியர் ம .சௌந்தர ராஜன் அவர்கள் . புதிய உலகில் புடம் போட வைத்த பள்ளி நாட்கள் .
சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய் பாளை .தூய சவேரியார் கல்லூரியின் வேதியல் மாணவனாகப்  பயின்ற நாட்கள்
கம்பனையும் தேம்பாவணியயும் மகாகவிபாரதியையும் கீதாஞ்சலியையும்பயின்ற நந்தவன நாட்கள் 
கல்லூரியில் படிக்கும் போது பாரதப் பிரதமரின் தேசிய சத்பாவனா விருதினை புது டெல்லி விக்யான் பவனில் 12.1.1994 ஆம் ஆண்டு திரு .பி .வி .நரசிம்மராவ் அவர்களிடம் பெற்றதும் 
"புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு" என்ற தலைப்பில் பி .எஸ் .சி .முன்றாம் ஆண்டு பயின்ற போது திறனாய்வுக் கட்டுரை எழுதி தஞ்சையில் தமிழக அரசு நடத்திய எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களிடம் விருது பெற்றதும் இன்றும் மலரும் நினைவுகள் .

இந்த நினைவுகளை நிறுத்திப் பார்க்க வைத்தது இன்று காலை பங்கேற்ற சூரியன் பண்பலை நடத்திய நேர்காணல் .வண்ணார்பேட்டை சூரியன் பண்பலை அலுவலகம் பொது மேலாளர் திரு .சங்கரசுப்பு எப்போதும் போல் உற்சாகமாகப் பேசினார் .
நிகழ்ச்சி ஏற்பாடு சன் தொலைக்காட்சி அரட்டை அரங்கத்தில் கலக்கும் பெரிய தம்பி பிச்சுமணி .
மென்மையான குரலால் கட்டிப் போடும் வள்ளி மணாளன் அழகாக வினாக்களைத் தொடுத்தார்
மனம் ஓரிரு வினாடிகளில் இருபது வருடங்கள் பின் நோக்கிப் பயணித்தது .
"பிரபலங்களின் வெற்றிப்படிக்கட்டுகள்  "எனும் நிகழ்ச்சியாக 13.7.2013 சனிக்கிழமை இரவு 10மணிக்கு நெல்லை சூரியன் பண்பலையில் ஒளிபரப்பாகிறது .
நினைவுகளின் படிக்கட்டுகளில்இன்னமும்  நிற்கிறது மனம் .


சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 

Thursday 21 March 2013

அவரவர்





அவனுக்குச் சொன்ன கவிதை
உனக்கில்லை
உனக்குச் சொல்லாத கவிதையும்
அவளுக்கில்லை
ஆனாலும்
அவரவருக்குச்
சொன்ன கவிதையே
அவரவருக்குப் புரியும்
ஆதலால்
அனைவருக்கும்
புரியும் கவிதையென்று
அவனியில்
யாதொன்றுமில்லை
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.